பதவி மோகம் படுத்தும் பாடு- டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்; பக்.64; ரூ.60; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12; ✆ 86680 57596.
மனிதர்கள் பலவழிகளை நாடி பதவியை அடைந்து, தவறுகளை இழைக்கின்றனர். ஆனால், 'பதவி பெறுவதன் நோக்கத்தில் தெளிவும் நாளை இதற்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வும் இருந்தால் பதவி மீது ஆசை உருவாகாது' என்ற சீரிய கருத்தை இறைதூதர் (ஸல்) அவர்களுடையதாகவும், கலீஃபாக்களுடைய வரலாற்றில் இருந்து தக்கச் சான்றுகளுடன் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
உலகியல் இன்பங்களில் ஒன்றாகிவிட்ட பதவி என்பது அதிகாரத்தின் அடையாளமாக, புகழாசையாக, பெருமைக்குரியதாக விளங்குவதோடு, மனிதர்களுக்கு இடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கி பொறாமை எண்ணத்தை வளர்த்து வெறுப்பு, சண்டை, சச்சரவுகள் என்ற பின்விளைவுகளை அதிகரிக்கச் செய்கிறது.
பின்னர், சமூகத்தில் பல்வேறு தீய பண்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்கிறார் நூலாசிரியர்.
பதவி படுத்தும் பாடு, ஏனிந்தப் பதவி மோகம், பதவி மோகம் அல்ல, தானாக வரட்டும், கோருவது தவறா?, மோசடி வழிமுறைகள் வேண்டாம், ஜனநாயக முறைகள் பின்பற்றப்படுவதன்
அவசியம், பதவி பெறுவதன் நோக்கம், அதிகாரமா அல்லது கொள்கையா, பற்றற்று இரு, புகழுக்கு ஆசைப்படல், தொடரட்டும் பழைய வாழ்க்கை முறை, கடந்துவந்த பாதையை மறவாதே, மக்களின் பங்கு, எப்போதும் போல இரு என்கிற தலைப்புகளில், நல்லகருத்துகளை எளிய தமிழில் பாமரரும் பின்பற்றும் வகையில் நூலாசிரியர் முன்வைக்கிறார். இன்றைய அரசியல்வாதிகளும், இளைய தலைமுறையினரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.