மகாபாரதத்தின் தெய்வீக புருஷர்கள் - ராஜலட்சுமி சீனிவாசன்; பக்.344; ரூ.499; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 044- 2986 0070.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவிய மக்கள் மனதில் ஒவ்வொரு கதாபாத்திரமாக பதிந்ததுதான் மகாபாரதம். பிரபல ஆராய்ச்சியாளர்கள் தினகர் ஜோஷி ஹிந்தியில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த நூல். மாபெரும் இதிகாச காவியமான மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. தருமநெறியைப் பேசும் மகாபாரதம் மனிதர்கள் தருமநெறிப்படி தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தருகிறது.
அந்த வகையில் மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஆண் கதாபாத்திரங்கள் குறித்து நாம் அறியாத சுவாரசியமான தகவல்களை அள்ளித் தருகிறார் நூலாசிரியர்.
சில பாத்திரங்களைப் பற்றிய மூல நூலாசிரியரின் கருத்துகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், நூலாசிரியர் தனது கருத்தை நிரூபிக்க முன்வைக்கும் வாதம் வலிமையானது.
எடுத்துக்காட்டாக, மகாபாரதக் காப்பியத்தின் எதிர்நிலைத் தலைவன் துரியோதனன் என்றே அனைவரும் சொல்வர். ஆனால், துரியோதனன் எதிர்நிலைத் தலைவன் என்ற சொல்லுக்கான நிறைவான அர்த்தத்தைத் தரக் கூடிய மனிதர் என்று உறுதிபடக் கூற முடியாது என அழுத்தமான வாதங்களுடன் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
இவ்வாறாக, பீஷ்ம பிதாமகர், திருதராஷ்டிரன், கர்ணன், அர்ச்சுனன், அசுவத்தாமன் என பாரதக் காப்பியத்தின் பாத்திரங்களை அலசி ஆராய்கிறார் நூலாசிரியர். ஆன்மிக அன்பர்கள் தவறவிடக் கூடாத நூல் இது.