பர்மா - ஓர் அரசியல் வரலாறு - ராம் அப்பண்ணசாமி; பக். 192; ரூ.230; கிழக்கு பதிப்பகம், சென்னை- 14; ✆ 044-42009603.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்த பர்மா (இன்றைய மியான்மர்) எப்படி தனி நாடாக மாறியது என்ற கேள்வியில் தொடங்கி 70 வருடங்களாக ஆயுதப்போராட்டம் நடப்பது எதனால் என்பது வரையிலான அனைத்து கேள்விகளுக்கும் இந்நூல் விடை பகிர்கிறது.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த பர்மாவின் அண்டை நாடுகளில் இன்றளவும் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், பர்மாவைப்போல சுலபத்தில் தீர்க்க முடியாத பிரச்னைகள் வேறெந்த நாட்டிலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கான பின்னணியை அந்நாட்டின் வரலாற்று பக்கங்களை சற்று ஆழமாக ஊடுருவி இந்நூல் விவரிக்கிறது.
அரசாங்கத்தின் ஓர் அங்கமாக திகழ வேண்டிய ராணுவம் மியான்மரில் அரசாங்கமாகவே மாறி நிற்பதுடன், மதம், இனம் உள்ளிட்டவையும் அந்நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆங் சான் சூச்சி பர்மாவில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக அவர் ஐநா மன்றத்தால் இன அழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவரது வரவால் சற்று அடங்கியிருந்த ராணுவம் மீண்டும் தலையெடுத்தது எப்படி என்பது வரையிலான பல்வேறு தகவல்கள் இந்நூலில் உள்ளன. பர்மா குறித்த அத்தனை கேள்விக்கும் பதில் தருகிறது என்பதே இந்நூலின் சிறப்பு. வரலாற்று ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.