சொல்லி அடி - சோம. வள்ளியப்பன்; பக்.152; ரூ.175, கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044-42009603.
'அதிக மதிப்பெண்கள், நல்ல வேலை, நிறைய சம்பாத்தியம், நல்ல துணை.. என்கிற ஆசை அனைவருக்கும் உண்டு. மனிதர்கள் உயிரோடு மட்டுமல்ல; உயிர்ப்போடு இருப்பதற்கும் அடையாளம் அவர்களது செயல்பாடுகள்தான். அவை எப்போதும் ஏதோ ஒன்றை நோக்கி அமைகிறது. இலக்கை எவ்வாறு வகுத்துக் கொள்வது? வகுத்துக் கொண்ட இலக்கை எப்படி அடைவது? ' என்பதை விவரிக்கிறது இந்த நூல்.
'சில இலக்குகளை அடைய வாழ்நாள் முழுக்கப் பயணிக்க வேண்டியிருக்கும். அதற்கு கடும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். என்ன நடந்தாலும் சரி பின் வாங்கமாட்டேன். எடுத்துக் கொண்டதை செய்து முடித்தே தீருவேன்' என கங்கணம் கட்டிக் கொண்டு முன்னேறினால் மட்டுமே இலக்கை அடைய முடியும். அப்படிப்பட்ட மூன்று மிகச் சிறந்த வெற்றிகள், வரலாற்று நிகழ்வுகள் வாசகர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவை ஆய்வு செய்யச் சென்றவர் தன்னோடு வந்தவர்களின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார்?, தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்?, உணவு, உடை, அடையாளம் எல்லாவற்றையும் இழந்து நாஜி முகாமில் சிக்கிக் கொண்ட ஒரு மருத்துவர் எவ்வாறு அந்த துயரைக் கடந்தார்? என்ற மூன்று சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கடினமான இலக்குகளையும் அடைவதற்கான வழிகள்; பெரும் சிக்கல்களிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த யோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நூல் வாசிக்க வேண்டிய அற்புத நூல்.