வானத்திற்கு மட்டும்தான் மின்னல்களா?- பெ.சிதம்பரநாதன்; பக்.117; ரூ.130; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ✆ 044- 2813 2863.
'தினமணி', 'அமுதசுரபி', 'கலைமகள்', 'ஓம்சக்தி' உள்ளிட்ட இதழ்களில் வெளியான 17 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகள் விவாதத்துக்கு உரியவை- ஒவ்வொன்றும் வாசகர்களைச் சிந்திக்கத் துண்டுவதோடு, படிப்பதற்கும் ரசனையாக இருக்கின்றன.
அரசியல், மதம், சமய நல்லிணக்கம், ஜனநாயகம், மதச் சார்பற்ற கொள்கை, சுத்த சன்மார்க்கம், அத்வைதம், சமூகநீதி, சாதிக் கணக்கு, வல்லபபாய் படேல் சிலை உள்பட முக்கிய பிரச்னைகள் கட்டுரைகளில் அலசப்படுகின்றன. விபீஷணன் பெயர் யாருக்குமே ஏன் வைக்கப்படவில்லை?, மதப்பேய் ஒழிக என்பதற்கு வள்ளலார் வழியே தீர்வு, திருவள்ளுவரை முன்னிறுத்தாது கம்பனை முன்வைத்து பாரதியார் பாடியது ஏன்.. போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கெல்லாம் இந்த நூல் நல்லதொரு விடையை அளித்துள்ளது எனலாம்.
கேரளத்தில் மலையாளமும், கர்நாடகத்தில் கன்னடமும் கட்டாயப் பாடமாக இருக்கும் நிலை, தமிழகத்தில் தமிழுக்கு ஏன் இல்லை என்றதொரு நல்லதொரு கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார். திருக்குறளைப் பற்றி வித்தியாசமான முறையில் நூலாசிரியர் அலசியுள்ளார். இதுவரை நம் அறியாத, நம்மை உறுத்திக் கொண்டிருந்த பல செய்திகளுக்கு விடைகள் உள்ளன. 'ஒரு சொல்- இரு பொருள்' என்ற கட்டுரையில், பல்வேறு வரலாற்று நிகழ்வுகள், ஆன்மிகமும் அலசப்படுகின்றன. தமிழில் முற்றிலும் மாறுபட்ட நூல்.
ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல், பல நூல்களில் படித்தறிய வேண்டியவற்றை ஒற்றை நூலில் அறியலாம் என்றதொரு வியப்பை ஏற்படுத்துகிறது.