ஷேக்ஸ்பியரும் சங்கரதாஸ் சுவாமிகளும்- அரிமளம் சு. பத்மநாபன்; பக். 137; ரூ.160; காவ்யா, சென்னை- 24; ✆ 98404 80232.
நூலின் தலைப்பே வித்தியாசமாக இருந்தாலும், இருவருமே நாடக படைப்பாளிகள். முன்னவர் ஆங்கிலேயர், பின்னவர் தமிழ் நாடக உலகின் இமயம். அத்தகைய சிறப்புக்குரிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்து 100 ஆண்டுகள் நிறைந்த நினைவையொட்டி இந்த நூலை உருவாக்கித்தந்துள்ளார் நூலாசிரியர்.
தமிழ்த் திரை உலகில் கோலோச்சிய நடிகர்கள், மறைந்த நடிப்பு மேதைகள் பலரும் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்கள்தான். அப்படிப்பட்ட சுவாமிகளையும், ஷேக்ஸ்பியரையும் ஒப்பிடும்போது, தாங்கள் சார்ந்த சமூகத்துக்காக நாடகங்கள் படைத்து தங்கள் வாழ்நாள் முழுவதையும் நாடகக் கலைக்காக அர்ப்பணித்தவர்கள்.
ஷேக்ஸ்பியர் தனது வாழ்நாள் முழுவதும் மனித குணங்கள் கொண்ட மறக்க முடியாத, காலத்தால் அழியாத கதாபாத்திரங்களை உள்ளடக்கிய சிறந்த ஆங்கில இலக்கியங்களைக் கொண்டுவந்தார்.
சங்கரதாஸ் சுவாமிகள் பாய்ஸ் கம்பெனியை தொடங்கி (1918) தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். இப்படி இருவரைப்பற்றிய ஒப்பீட்டுத் தகவல்கள் மற்றும் பல ருசிகர
விஷயங்கள் நூலில் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பது வாசிப்பவர்களுக்கு வியப்பைத்தரும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் பட்டியல், சுவாமிகளின் நாடகங்களின் பட்டியல் பின் இணைப்பாகவும் தரப்பட்டுள்ளன. நாடக ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.