வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி - முனைவர் ப. பாலசுப்பிரமணியன்; பக். 232; ரூ.250; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044-26502086.
ஆன்மிக சீர்திருத்தவாதி என்ற பெருமைக்குரிய வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக தொகுத்து அளித்துள்ளார் நூலாசிரியர்.
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் அவதரித்த இராமலிங்க அடிகளார் ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். ஐந்தாம் வயதில் சிதம்பரம் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தபோது, அவர் தெய்வப் பிறவி என்பதை அர்ச்சகர் அடையாளம் கண்டார்.
அதன்பிறகு வள்ளலார் பொன்னேரியிலும் சென்னை ஏழுகிணறு பகுதியிலும் வாழ்ந்தார். அவர் கந்தகோட்டத்தில் முருகன் கோயிலில் மாணவர் பருவத்தில் 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற பாடலை பாடியதைக் கண்டார் அவரது ஆசிரியர் சபாபதி முதலியார்.
அப்போது, இராமலிங்க அடிகளாருக்கு உலகியல் கல்வி தேவையில்லை என்று கூறினார். இருபத்து ஏழாம் வயதில் குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்தால் சகோதரி மகளை திருமணம் செய்து முதல்நாள் இரவில் மனைவிக்கு திருவாசகத்தை போதித்தது, தனது துறவற வாழ்க்கையை விளக்கி கூறி விடியற்காலையில் வீட்டைவிட்டு வெளியேறியது,
சத்தியஞானசபை, அருட்பெருஞ்சோதி வழிபாடு என வள்ளலாரின் அடுத்தடுத்த நிலைகளின் அற்புதங்கள், அவரது திருவருட்பா உருவான விதம், திரை தத்துவம், சுத்த சன்மார்க்க நெறி உள்ளிட்ட விவரங்களும், வல்லநாடு சிதம்பரசாமிகளின் ஆன்மிக லீலைகளும் இந்த நூலில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. வள்ளலாரையும் சன்மார்க்க நெறிகளையும் அறிய விரும்புவோருக்கு இந்த நூல் சிறந்த கையேடு.