ஸி.வி.ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - ஸி.வி.ஸ்ரீராமன் (தமிழில் - த. விஷ்ணுகுமாரன்) பக்.736; ரூ. 1000; சாகித்திய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை 18; ✆ 044-24311741.
சாகித்திய அகாதெமி விருதுபெற்றவரின் 75 மலையாளச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. பல்வேறு சமூகங்கள், இடச்சூழல்களை பின்னணியாகக் கொண்டு தனிமனித உளவியல் நிலையும், சூழல்களுக்கு ஏற்ப அவர்கள் செயல்படும் விதமும் கதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பெரும்பாலான கதைகள் குறுக்கு வழிகளில் உயர்நிலையை அடைவதற்கு முயலும் மனிதர்களின் முகத்தை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல சில கதைகள் கம்யூனிச இயக்க போக்கையும் வெளிக்காட்டியுள்ளது. ஆண், பெண் பாலியல் மீறல்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதைமாந்தரின் பெயரை குறிப்பிடாமல் கதையின் போக்கிலேயே அவர்களின் விவரங்கள், சூழ்நிலைகள், மனநிலைகளை அறிந்து கொள்ளும் வகையில் பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட பெயர்கள் இருந்தனவா என்று எண்ணத்தோன்றும் வகையில் இதர பாத்திரங்களின் பெயர்கள் புனையப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கதையும் இந்தியாவின் பல மாநிலங்களில் நடப்பது போன்று அமைந்துள்ளதால் அந்தந்தப் பகுதியின் பழக்கவழக்கங்களும், மொழிகளும் கதைகளின் ஊடே கடந்து செல்கின்றன.
உரைநடை விளக்கங்கள் பெருமளவு இன்றி, ஒருவருக்கொருவர் பேசுவது போன்றே கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அந்த தளத்தில் பயணிக்கும் போது கதைகளின் தாக்கம் நம்மையும் பற்றிக் கொள்கிறது.