தொன்மை இலக்கியங்களும், கவிஞர் கண்ணதாசனின் திரை இலக்கியங்களும் - வி.சுந்தரம்; பக். 344; ரூ.400; தி ரைட் பப்ளிஷிங், சென்னை - 17; ✆ 044-24332682.
வள்ளுவன், ஒளவை, பாரதி என பெருந்தமிழ் புலவர்கள் படைத்த காப்பியங்களுக்கு இணையான இலக்கியக் கருத்துகளை திரை இசைப் பாடல்களுக்குள் கவிஞர் கண்ணதாசனும் செதுக்கியிருக்கிறார் என்பதை சான்றுரைக்கும் நூல் இது. தொன்மை இலக்கியத்தின் சுவையை சிறிதும் குறைக்காமல் திரைப் பாடல்களுக்குள் சிறைப்படுத்தும் கலை கவிஞருக்கு கை வந்த ஒன்று என்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டிருக்கிறார் நூலாசிரியர். திருக்குறளிலும், முதுமொழியிலும், பாப்பா பாடல்களிலும் வலியுறுத்தப்பட்ட கருத்துகள், வெகுஜன மக்களுக்கான திரைப்பாடல்களுக்குள் எளிமையாக கடத்தப்பட்ட விதமும் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
ஞானம், வளம், தீரம் குறித்து சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன. ஆனால், அவை மூன்றையும் இணைத்து கல்வியா, செல்வமா, வீரமா என சரஸ்வதி சபதத்தில் கவிஞர் இயற்றிய பாடல் இன்றளவும் நிகரற்ற ஒன்றாக விளங்குவது சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.
கவிஞரின் தத்துவம், கொள்கை விளக்கம், காதல், பகுத்தறிவு பாடல்களில் இலக்கியத் தரம் தளர்வின்றி மிளிர்வதை விரிவாக விளக்கியுள்ளார். 'சுடுகாட்டு எலும்பை சோதித்து பார்த்ததில்' எனத் தொடங்கும் கண்ணதாசனின் பாடலை குறிப்பிட்டுள்ள நூலாசிரியர், சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் அந்தக் கவிதைக்கு எந்த அங்கீகாரமும் அளிக்கப்படாததே அடிப்படையில் ஒரு பாகுபாடு என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். 'கவிஞர் இறக்கலாம். அவர் சிந்தனையில் பிறந்த தமிழுக்கு ஒருபோதும் மரணமில்லை' என்பதை தீர்க்கமாக உணர்த்துகிறது இந்நூல்.