பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்- எஸ். கணேசன்; பக். 208; ரூ.500; சண்முகம் பப்ளிகேஷன்ஸ், மதுரை-625002; ✆ 97863 89946.
குமரி எல்லையில் இருந்து மதுரை வரை பரவிக் கிடந்த பாண்டிய நாட்டுக்கு ஏற்பட்ட இன்னல்களை ஆதாரங்களுடன் இந்த நூல் விளக்குகிறது.
மணலூரை தலைமையிடமாகக் கொண்டே குலசேகரப் பாண்டியன் என்ற மன்னர் ஆட்சி செய்தார் என்றும் வணிகன் ஒருவனது கோரிக்கையால்தான், கடம்ப மரங்களை அழித்து மதுரையை உருவாக்கினார் என்றும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இதற்காக நடந்த போர்கள், வேதனைகள், உயிர்ப்பலிகள் பற்றிய தகவல்கள் பல உண்மைகளை பறைசாற்றுவதாக உள்ளது.
சோதனைகளில் முதன்மையானது கண்ணகியின் கணவன் கோவலனை பாண்டிய நெடுஞ்செழிய மன்னர் தவறானத் தீர்ப்பால் கொலை செய்ததால் எழுந்ததாகும். இதை நூலாசிரியர் உரைநடையுடன் பதிவிட்டுள்ளார். இரண்டாவது கடற்கோள் ஏற்பட்டதாகவும் அதில் பல நூல்கள் அழிந்துவிட்டதையும் நூல் விளக்குகிறது.
இதுபோல, மன்னன் பூதப்பாண்டியன் போரில் கொல்லப்பட்ட நிலையில் அவரது மனைவி ராணிதேவி பெருங்கோபெண்டு உடன்கட்டை ஏறிய நிகழ்வு வியப்பை தரும் சம்பவம். பாண்டியர்கள் - சேரர்கள் இடையேயான போர், பொற்கொல்லர்களை பாடாய்படுத்திய பாண்டிய மன்னர்கள், வருசநாட்டு பகுதியில் தொடர்ந்து நீடித்த நோய், பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய ஒய்சாளர்கள் என பலவிதமான தகவல்கள் நூலை அலங்கரிக்கின்றன. வரலாற்று பிரியர்கள் படிக்க வேண்டிய நூல் இது.