பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 64-வது தலம் திருப்பேணுப்பெருந்துறை.
இறைவன் பெயர்: சிவானந்தேஸ்வரர்
இறைவி பெயர்: மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது
எப்படிப் போவது
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் இப்போது திருப்பந்தறை என்று அழைக்கப்படுகிறது.
ஆலய முகவரி
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பந்துறை,
நாச்சியார்கோவில் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 602.
இக் கோயில், தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்துவிட்டார். பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக்கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்துவிட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க, தனது மாமனான மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி முருகனுக்கு மகாவிஷ்ணு அறிவுரை கூறினார்.
அதன்படி முருகப் பெருமான், திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாக சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில், ஒருநாள் காவிரியின் கிளை நதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடிகொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது.
உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகக் பெருமான், சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க, அதுவரை மெளனமாக இருந்த முருகப் பெருமான் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.
ஊமையாக இருந்த முருகப் பெருமானே இங்கு பேசும் பாக்கியம் பெற்றதால், பேச்சு சரியாக வராத குழந்தைகளைப் பெற்றோர்கள் இங்கு அழைத்து வந்து தரிசிப்பதை இன்றும் பார்க்கலாம். எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனைப் பேசவைத்த தலமாகவும் திகழ்ந்து, பேசும் சக்தியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையைத் தீக்கும் தலமாகவும், வாக்குவன்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது.
இத்திருத்தலத்தில், முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கிய சிறிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. எதிரில் மங்கள தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையில் கோவிலை ஒட்டி இரட்டை விநாயகர் சந்நிதிகள் உள்ளன. குக விநாயகர், சாட்சி விநாயகர் என்று பெயர்கள். முருகன் இத்தலத்துக்குத் தவமிருக்க வந்தபோது, விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்குப் பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம். அவர்களை வழிபட்டு ஆலயத்தினுள் சென்று இறைவனை வணங்கலாம்.
மூன்று நிலை ராஜகோபுரம் வழியே உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஒரே பிராகாரம் உள்ளது. கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன. இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர்.
சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சின் முத்திரையுடன் தியான நிலையிலுள்ள தண்டபாணி, பார்த்துப் பரவசம் அடைய வேண்டிய திருமேனி.
ஆலயத்தில் உள்ள பிட்சாடனர் உருவச்சிலையும் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இவருக்கு அமுது படையல் திருவிழா நடக்கிறது. அம்பாள் மங்களாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவ்வாலயத்தின் தலமரம் வன்னி. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.
செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில் கரிகால் சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்று இத்தல கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தலத்தில் பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்தின் விசேஷ மூர்த்தியான தண்டபாணி சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை தொடர்ந்து 45 நாட்கள் பருகி வர, பேச்சுக் குறைபாடுகள் நீங்கும். நல்ல வாக்குவன்மையும், படிப்பில் கவனமிகுதியும் ஏற்படும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமையன்று இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, கணபதி, சுவாமி - அம்பாள் மற்றும் கந்தனை வழிபட்டால், தோல் வியாதிகள் யாவும் நீங்கப்பெறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
பாடியது - இரா. குமரகுரு, ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை