பாடல் 2:
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர் போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே
விளக்கம்:
இமையோர்=தேவர்கள்; கந்தம்=நறுமணம். அந்தி வேளையில் ஆடப்படும் நடனத்திற்கு சந்தியா தாண்டவம் என்று பெயர். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினை குடித்த பெருமான், தேவர்கள் போற்றும் வண்ணம் பிரதோஷ நேரத்தில் (மலை நேரத்தில்) ஆடிய நடனம் என்பதால் சந்தியா தாண்டவம் என்ற பெயர் வந்தது.
பொழிப்புரை:
எமது தந்தையே என்று அன்புடன் இறைவனை அழைக்கும் தேவர்கள், சீர்காழி தலத்தில் உள்ள திருக்கோயிலின் உள்ளே புகுந்து நறுமணம் பொருந்திய மலர்களைத் தூவி பெருமானை வழிபடுகின்றனர்; இவ்வாறு தேவர்களால் வழிபடப்படும் இறைவன் நன்றாக வெந்த சாம்பலைத் தனது திருமேனியில் பூசியுள்ள பெருமான், மலங்களின் சேர்க்கை இல்லாதவராக விளங்குகின்றார்.