பாடல் 6:
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா நின் பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
விளக்கம்:
சங்கரன்=நலம் அளிப்பவன்; சதாசிவன்=அருவுருவ, இலிங்கத் திருமேனியாக இருப்பவன். இந்த பாடல் முழுவதும் இறைவனின் திருப்பாதங்களைப் போற்றுவதாக அமைந்துள்ளது.
பொழிப்புரை:
எல்லோர்க்கும் நலத்தினை அளிப்பவனே, அருவுருவ இலிங்க வடிவாக இருப்பவனே, படம் எடுக்கும் பாம்பினை அணியாக அணிந்தவனே, புண்ணியத்தின் வடிவாக உள்ளவனே, அழகிய தாமரை மலரில் உறையும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண முடியாதவாறு தழல் உருவாக எழுந்தவனே, உனது திருப்பாதங்களை போற்றுகின்றேன், தாமரை மலர் போன்று மென்மையான உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன். திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.