பாடல் 5:
பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலை ஒர் பாகம்
கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே
விளக்கம்:
இந்த தலத்து அன்னையின் திருநாமம் கரும்படுசொல்லம்மை. இந்த திருநாமம் இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளதை நாம் உணரலாம், சுரும்பு=வண்டு; பிணியற்றவன் பெருமான். ஆமயம் என்றால் நோய் என்று பொருள். நோய்கள் ஏதும் அணுகாத தன்மை உடைய பெருமானை நிராமயன் என்று வடமொழியில் கூறுவார்கள். தனது நோயினைத் தீர்த்து தன்னை ஆட்கொண்டவன் பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு ஆமயம் தீர்த்து என்னை என்று ஒரு பதித்தினை அப்பர் பிரான் தொடங்குகின்றார்.
பொழிப்புரை:
பெரும் பிணிகள், பிறப்பு மற்றும் இறப்பு இல்லாதவனும், தனது உடலின் ஒரு பாகத்தில் கரும்படுசொல்லம்மை என்று அழைக்கப்படும் உமையன்னையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு உள்ளவனும், வண்டுகள் தேனை உண்பதால் அரும்புகள் மலராக மலரும் பிரிந்து எழுகின்ற கொன்றை மலர்களை விரும்பி அணிபவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்கின்ற பெருமான் ஆவான்.