பாடல் 7:
தனம் வரு நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வருதிக்கு
உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று
சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம் மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன்று
எரிந்த அவுணர்
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வத் திருநாரையூர்
கை தொழவே
விளக்கம்:
முன்று=முன்னே, எதிரே; வினயங்கள்=மயக்கம் என்றும் வஞ்சனைச் செயல்கள் என்றும் இரு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே;
பொழிப்புரை:
பண்டைய நாளில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் அம்பினை எய்து, அந்த நெருப்பினில் எரிந்த அசுரர்களின் சினத்தினை ஒரே சமயத்தில் அழித்த வல்லமை உடைய சிவபெருமான் பொருந்தி உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை நீங்கள் உங்களது கைகளினால் தொழுது வணங்கினால், உங்களது செல்வம் பெருகும், நல்ல திருப்பங்கள் உங்களது வாழ்வினில் ஏற்படும், வாழ்வினில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல திசைகளிலும் திரியும் உமது உடலில் பொருந்தியுள்ள ஐந்து கள்வர்கள் செய்யும் வஞ்சகச் செயல்களை நீர் அடையாளம் கண்டு கொண்டு வெற்றி கொள்ளலாம்; புலன்களின் வஞ்சகச் செயல்கள் தவிர்க்கப் படுவதால் பெருமான் பற்றிய சிந்தனைகள் உங்களது உள்ளத்தில் பெருகும்.