பாடல் 3:
வேந்தராய் உலகாள விருப்புறின்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிடச்
சாதியா வினையான தானே
விளக்கம்:
நீதி=விதிமுறை; வேதங்களிலும் புராணங்களிலும் அருளாளர்களின் பாடல்களிலும் சொல்லப் பட்டுள்ள வழிமுறை; சாதியா=செயலற்று விடும். வினைகள் செயலற்று விடுவதால், உயிரினை பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கவைக்கும் வினைகளின் பிடியிலிருந்து உயிர் விடுதலை பெற்று, முக்தி நிலையை அடையும் என்பதே வினைகள் செயலற்று விடுவதன் விளைவாகும்.
பொழிப்புரை:
உலகத்தவரே, நீங்கள் வேந்தராக உலகினை ஆள்வதற்கு விருப்பம் கொண்டவர்களாயின், பூந்தராய் தலத்தில் பொருந்தி உறையும் பெருமானின் பொன்னான திருவடிகளை, வேதம் சிவாகமம் அருளாளர்களின் பாடல்கள் ஆகியவற்றில் சொல்லிய வண்ணம் முறையாக வழிபடுவீர்களாக. அவ்வாறு பெருமானை தியானித்து அவனது பெருமைகளை நினைத்து அவனை வழிபட்டால், உம்முடன் தொடர்பு கொண்டுள்ள வினைகள் செயலற்று விடும். அவ்வாறு உமது வினைகள் செயலற்று விடுவதால், வினைகளின் செயல்பாடுகளிலிருந்து விடுதலை பெற்று நீங்கள் முக்தி நிலையை அடையலாம்.