பாடல் 8:
இருக்கு நீள்வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த
அரக்கன் ஆகம் நெரித்து அருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே
விளக்கம்:
இருக்கும்=வீற்றிருக்கும்; நீள்வரை=நீண்ட கயிலை மலை; ஆகம்=உடல்; மருநறுமணம்; குலாவிய=நிறைந்த; தரு=மரங்கள்;
பொழிப்புரை:
தான் வீற்றிருக்கும் நீண்ட உயர்ந்த கயிலாய மலையினை இருபது கைகளாலும் பற்றி எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடலை, கயிலாய மலையின் கீழே அகப்பட்டு நொறுங்குமாறு தனது கால் பெருவிரலை அழுத்திய பெருமான், பின்னர் அரக்கன் சாமகானம் பாடி இறைஞ்சிய போது, அரக்கனது நிலைக்கு இரங்கி அவனுக்கு பல வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமான், உறையும் திருக்கோயில் சாய்க்காடு ஆகும். நறுமணம் பொருந்திய மல்லிகை சண்பகம் போன்ற வளமான பூக்களைக் கொண்ட மரங்கள் நிறைந்ததும் குளிர்ந்து விளங்குவதும் ஆகிய சோலைகள் நிறைந்த இடம் சாய்க்காடு ஆகும்.