பாடல் 9:
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானும் உன்னி அவர் தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர் துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
வேத முதல்வன்=பிரமன்; கரியான்=திருமால்; உன்னி=நினைத்து, தாமே உயர்ந்தவர் என்பதை அடுத்தவரை உணரவைக்க வேண்டும் என்ற முனைப்புடன்; பரன்=மேம்பட்டவன்; கால்=காற்று; பிரமனின் உடல் வெண்மை நிறத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் முகமாக பாலாடு மேனி என்று குறிப்படப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
தனது திருமேனியின் மேல் நீண்டு ஓடி விளையாடுவது போன்று முப்புரி நூலை அணிந்த சிவபெருமான் பல திருவிளையாடல்களை புரிகின்றான். வெண்ணிற மேனியை உடையவனும் வேதமுதல்வனாக திகழும் பிரமனும், கரிய திருமேனி உடைய திருமாலும், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அடுத்தவருக்கு உணர்த்தும் பொருட்டு பெருமானின் அடியையும் முடியையும் தேடியபோது அவர்கள் காண முடியாத வண்ணம் நீண்ட தழற்பிழம்பாக, பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருக்கும் மேலானவனாக நின்ற பரமனின் ஊர் திருமுல்லைவாயில். காற்றில் அசையும் நீலமலர்களும் கதிர்கள் மிகுந்த செந்நெல் வயல்களில் சேல் மற்றும் வாளை மீன்கள் குதித்து விளையாடும் வயல்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயில்.