133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 11

இறைவனைத் தொழ வேண்டிய
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 11

பாடல் 11:

    குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவாக
    நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
    நன்றார் தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
    குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே

 
விளக்கம்:

பொதுவாக பதிகத்தின் கடைக் காப்பினில் இராவணன் குறித்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுவதில்லை. இந்த பதிகத்தின் எட்டாவது பாடல் சிதைந்ததால், இராவணின் வலிமையை அடக்கிய தன்மையும் நமக்கு கிடைக்கவிலையே என்ற குறை தீரும் பொருட்டு இந்த குறிப்பு அமைந்துள்ளதோ என்று தோன்றுகின்றது. தமிழ் என்பது இங்கே தேவாரப் பதிகங்களை குறிக்கும். குன்றாத் தமிழ்= பலன்களை அளிப்பதில் பாடிய நாள் முதல் முதல் என்றும் மாறாது விளங்கும் தேவாரப் பதிகங்கள்;
    
பொழிப்புரை:

கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் உடலும் தோள்களும், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையினின் மீது ஊன்றிய பெருமானை, நின்றியூர் தலத்தில் உறையும் பெருமானின் புகழினைப் போற்றி, தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நன்மை அளிக்கும் புகலித் தலத்தில் தோன்றியவனும் தமிழ் மொழியில் எல்லையற்ற ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களை, ஓதுவோருக்கு அன்றைய நாள் முதல் குன்றாத பலன்களை அளிக்கும் வல்லமை பெற்ற இந்த பாடல்களை, முழு மனதுடன் பக்தி வைத்து சொல்லும் வல்லமை பெற்ற அடியார்கள் வாழ்வினில் குறையேதும் இன்றி நிறைவான புகழினை பெற்று விளங்குவார்கள்.          

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் பண்டைய நாளில் தனது அடியானின் உயிரைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்த இயமனின் வலிமையை வீழ்த்தி மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக அன்று முதல் பெருமானின் அடியார்கள் அச்சம் இன்றி வாழ்வதாக இரண்டாவது பாடலில் சம்பந்தர் குறிக்கின்றார். மூன்றாவது பாடலில் அனைத்து ஒலிகளுக்கும் ஆதாரமாக இறைவனின் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலி இருப்பது உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்கள் மட்டுமே இறைவனின் தன்மைகளை உணரமுடியும் என்பது சொல்லப் பட்டுள்ளது. ஐந்தாவது பாடலில் இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடு என்று உணர்த்தி நாம் இறைவனைத் தொழ வேண்டிய அவசியத்தை சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு இறைவன் ஒருவனே பற்றுக்கோடு என்பதை உணர்ந்ததால் தனது மனம் அவனது திருவடிகளையன்றி வேறெதையும் உணராது என்று தனது தன்மையை எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டும் பாங்கினை ஆறாவது பாட்டினில் நாம் உணரலாம். உயிர்கள் உய்ய ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டுத் பலியேற்று திரிவதை என்றும் மாறாத இயல்பாக பெருமான் கொண்டுள்ள தன்மை ஏழாவது  பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு என்றும் மாறாத கருணை உள்ளம் கொண்ட பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து தனது சிந்தை வேறெதையும் உணராது என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். நாம் புகழ்ந்து கூறும் சொற்களுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் ஒருவன் மட்டுமே இருப்பதால், அவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே உண்மையான வாழ்த்து என்று பத்தாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர், தேவாரப் பதிகங்கள் அன்று முதல் இன்று வரை பலன்கள் அளிப்பதில் குறையாத தன்மையுடன் விளங்குகின்றன என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று, இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் நமது உள்ளத்தால் உணராது, அவனது திருவடிகளைத் தொழுது அவனது தன்மைகளை முழுவதும் அறிந்து கொண்டு, அவனையே பற்றுக்கோடாக நினைத்து வாழ்ந்து, அவனது திருவடிகளையே எப்போதும் சிந்தனை செய்து, உரிய முறையில் அவனை வாழ்த்தி, தேவார திருவாசக பதிகங்களை ஓதி, என்றும் குறையாத பெருமானின் அருள் பெற்று நிறைவாக வாழ்வோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com