பாடல் 3:
பங்கயம் கண் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையர் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே
விளக்கம்:
உச்சி=துவாத சாந்தத் தாமரை; பழனம்=வயல்கள்; பங்கயம்=தாமரை; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை வணங்க வேண்டிய அவசியத்தையும் அவரது உயர்வினையும் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த இரண்டு நிலைகளையும் கருதி, பெருமானை தியானித்து தனது துவாதசாந்தப் பெருவெளியில் அவரை நிறுத்தியதாக கூறுகின்றார்.
பொழிப்புரை:
திருப்புன்கூர் வயல்களில் தாமரை மலர்கள் மலர்கின்றன; செழுமையான கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இத்தகைய நீர் வளம் நிறைந்த வயல்கள் மலிந்த திருப்புன்கூர் தலத்தில் உறையும் இறைவர் கங்கையைத் தனது சடையினில் ஏற்றவர் ஆவார். எங்களது தலைவராகிய அவர் எங்களது தலையுச்சியின் மேல் துவாதசாந்தப் பெருவெளியிலும் உறைகின்றார்.