பாடல் 9:
நாட வல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே
விளக்கம்:
நாடவல்ல மலரான் என்று பிரமனை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிரமனுக்கு நான்கு திசைகளையும் ஒரே சமயத்தில் நோக்கும் வண்ணம் நான்கு முகங்கள் உள்ளன். எனவே தான் தேடும் எந்த பொருளையும் எளிதில் கண்டறியும் ஆற்றல் படைத்தவன். இந்த தன்மையை, எதையும் எளிதில் நாடி உணரும் திறமையை குறிப்பிடும் பொருட்டு நாட வல்லவன் என்று இங்கே கூறுகின்றார். நாட வல்லவனாக இருந்தும், பெருமானின் திருமுடியைத் தேடி காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் எப்போதும் வேத கீதங்களை பாடியவண்ணம் இருக்கின்றார் என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.
அழகன் வீரன் கருணையாளன் என்று பல விதமாக பெருமானை வர்ணித்த சம்பந்தர், கலைகளில் வல்லவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடலில் வல்லவனாக வேதங்களை ஓதும் பெருமான் ஆடலில் வல்லவனாக ஐந்தொழில்களும் புரிகின்றான். பாடலையும் ஆடலையும் பயிலும் பெருமான் அதே சமயத்தில் வேதங்களை அருளியும், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து செயல்களையும் செய்தும் உயிர்களை உய்யவைக்கும் கருணைத் திறம் தான் என்னே.
பொழிப்புரை:
நான்கு முகங்களைக் கொண்டு எதனையும் எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் வாய்ந்த பிரமனும் திருமாலும், தனது அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நிற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற பெருமான் திருப்புன்கூர் தலத்தில் உறைகின்றான். அவரே ஆடவல்லானாக திகழ்கின்றார். அவர் இடைவிடாது ஆடலும் பாடலும் பயின்றவண்ணம் உயிர்களுக்கு பல விதங்களிலும் அருள் புரிகின்றார்.