131. அருத்தனை அறவனை - பாடல் 11

பெருமானின் திருவடிகளின் சிறப்பினை
131. அருத்தனை அறவனை - பாடல் 11


பாடல் 11:

    பொன் திகழ் காவிரிப் பொருபுனல் சீர்
    சென்றடை கடைமுடிச் சிவனடியை
    நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன
    இன் தமிழ் இவை சொல இன்பமாமே

விளக்கம்:

பொன் திகழ்=அழகுடன் விளங்கும்; பொரு புனல்=கரையில் மோதுகின்ற அலைகள்;

பொழிப்புரை:

அழகுடன் திகழ்ந்து அலைகள் இரு கரைகளிலும் மோதும் வண்ணம் ஓடிவரும் சிறந்த காவரியாற்றின் கரையில் அமைந்துள்ள கடைமுடி தலத்தினை சென்றடைந்து ஆங்கே உறையும்  பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிமையான தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் ஓதும் அடியார்களுக்கும் இன்பம் உண்டாகும்.    

முடிவுரை:

வினவுதிரேல் என்று குறிப்பிட்டு உலகத்தவரின் கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக இந்த பதிகத்தின் முதல் பாடல் அமைந்துள்ளது. அதே போன்று மற்ற பாடல்களும் இறைவன் அமரும்  இடம் கடைமுடித் தலம் என்று உலகத்தவர்க்கு தலத்தின் இறைவனின் தன்மையையும்   எடுத்துச் சொல்வதாக கொள்ளவேண்டும். உண்மையான மெய்ப்பொருளை அணுக வேண்டும் என்று விரும்பும் மனிதர்களுக்கு, சிவபெருமானே உண்மையான ஒப்பற்ற மெய்ப்பொருள் என்று பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் அடையாளம் காட்டுகின்றார். அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட பெருமான் எல்லையற்ற கருணையும் ஆற்றலும் உடையவன் என்பதை, சந்திரன் மறுவாழ்வு பெற்றதை குறிப்பிட்டு நமக்கு உணர்த்துகின்றார். இத்தகைய பெருமானை பலரும் வணங்கிப் பயன் அடைவதை மூன்றாவது பாடலில் உணர்த்தி, நான்காவது பாடலில் பண்டைய நாளில் தேவர்கள் உட்பட அனைவரும் அழியும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு உலகினை காத்த கருணையாளன் என்று உணர்த்துகின்றார். அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அனைத்துப் பொருட்களிலும் கலந்துள்ள பெருமான் என்று அவனது சர்வவியாபகத் தன்மை ஐந்தாவது பாடலில் விளக்கப் படுகின்றது. தனது திருவருளின் அம்சமாக விளங்கும் அன்னையுடன், உலகத்தவர்க்கு அருள்புரியும் நோக்கத்துடன் கடைமுடித் தலத்தினில் பெருமான் உறைகின்றார் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் அழகிய தோற்றம் ஏழாவது பாடலில் கூறப்படுகின்றது. பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சத்தை உடையவன் என்று எட்டாவது பாடலில் உணர்த்தும் சம்பந்தர் ஒன்பதாவது பாடலில் வியத்தகு ஆற்றலை உடையவன் பெருமான் என்று எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றார். இந்த அறிவுரை இன்றும் பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். மாற்று மதத்தவர்களின் போதனைகள் மற்றும் செயல்பாடுகள், இந்து மதத்தினை அழிக்கும் நோக்கத்துடன் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டு அவர்களது வலையினில் வீழாமல் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது. அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறாமல் இருக்கும் வண்ணம் அறிவுரை கூறப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், பதிகத்தின் பத்து பாடல்களையும் முறையாக ஓதும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்துடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றது. உண்மையான ஒப்பற்ற ருள் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை உணர்ந்து, அவனை முழு மனதுடன் வழிபட்டு, மாற்று மதத்தவரின் போதனைகளில் மயங்காது தொடர்ந்து பெருமானை வழிபட்டு, பதிகங்கள் ஓதி இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com