132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 8

பெருமானின் பெருமை
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 8

பாடல் 8:

    பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக
    மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
    எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்
    புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

பொதுவாக திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனின் வலிமையை சிவபெருமான் அடக்கியதும் பின்னர் அவனுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சியும் காணப்படும் ஆனால் இந்த பதிகத்தில், சிவபெருமான் இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, பெருமானின் அடியான் ஆகிய ஜடாயு, இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் பெருமை போன்று அவனது அடியார்களின் பெருமையையும் சிறப்பாக கருதியமையால், சம்பந்தர் ஜடாயு அரக்கனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார் போலும் என்று தோன்றுகின்றது. இத்தகைய குறிப்பு நமக்கு வடகுரங்காடுதுறை தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்து பாடலை (3.91.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இலை=மூலிகை பச்சிலைகள்

    நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கருத்தோடு ஒல்க
    வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
    ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி
    ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே

இந்த நிகழ்ச்சி இராமயணம் உத்தரகாண்டத்தில் காணப் படுகின்றது. தான் சந்தியாவந்தனம்  செய்வதற்கு கடற்கரை செல்வது வாலியின் அன்றாட வழக்கம். அவ்வாறு சென்ற வாலியைக் கண்ட அரக்கன் இராவணன், அவனது வலிமையை அடக்கும் பொருட்டு அவனது முதுகின் மீது ஏறி அமர்ந்தான். தனது முதுகின் மீது எவரோ அமர்வதை உணர்ந்த  வாலி, தனது வாலினால் அரக்கன் அசையாவண்ணம் சுற்றிக் கட்டினான் என்று வால்மீகி  கூறுகின்றார். ஒல்க=குழைய;

அரக்கனின் வலிமையை பெருமான் அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை; எனினும் பெருமான் மூன்று கோடி வாழ்நாள் அருளியது இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. பண் ஒன்ற=இசைப்பண் பாடலுடன் பொருந்தும் வண்ணம்; குடியாக=புகலிடமாக; மண்ணின்றி= மீண்டும் உலகினில் பிறக்க வேண்டிய அவசியம் இன்றி; விண்=விண்ணுலகத்தினும் பெருமை வாய்ந்த முக்தி உலகம்; மருவும்=வாழும்; புண்=காயங்களால் ஏற்பட்ட புண்; எண்ணின்றி=கணக்கில் அடங்காத வண்ணம்; வாணாள்=வாழ்நாள்
            
பொழிப்புரை:

இனிய இசை பொருந்தும் வண்ணம் பாடல்கள் பாடி, பெருமானின் திருவடிகளை புகலிடமாக கருதி வழிபடும் அடியார்கள், மீண்டும் நிலவுலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் விண்ணுலகத்தினும் மேலான முக்தி உலகத்தினை அவர்களுக்கு அருளும் பெருமான், தனது கழுத்தினில் மாணிக்கம் பதிக்கப் பட்டது போன்று கரையினை உடைய நீலகண்டன், உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் மூன்று கோடி வாழ்நாளை, பெருமானது அருளால் பெற்ற அரக்கன் இராவணனின் உடலில் காயங்களும் புண்களும் ஏற்படும் வண்ணம் போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் தலமாகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com