123. ஓர் உருவாயினை - பாடல் 10--13

பெருமான் ஏந்துதல்
123. ஓர் உருவாயினை - பாடல் 10--13

    ஒரு தாள் ஈர் அயின் மூவிலைச் சூலம்
    நாற்கால் மான் மறி ஐந்தலை அரவம்
    ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்து
    இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை

விளக்கம்:

பெருமானை எதிர்த்து வந்த மத யானையின் இயல்புடன் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய எண்களை இணைத்துள்ளதை நாம் உணரலாம். இந்த வரிகளில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள எண்கள் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் உள்ளதை நாம் காணலாம். தாள்=அடிமரம், காம்பு; ஈர் அயின்=ஈர்க்கும் தன்மை கொண்ட கூர்மை; பிளக்கும் தன்மை கொண்ட கூர்மை; 

ஒரே தண்டினில் மூன்றாக பிரியும் சூலத்தை ஏந்தும் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு பதினோராம் திருமுறையின் பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது. ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல் நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார். 

   மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்
    மூவரும் யான் என மொழிந்தவாறே

 
மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில்  (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

    மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்
    மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்
    மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
    மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

நாற்கால் மான்மறி=நான்கு வேதங்களையும் நான்கு கால்களாக உடைய மான் கன்று; ஐந்தலை அரவம்=பஞ்சாக்கர மந்திரத்தின் ஐந்து எழுத்துகளை ஐந்து தலையாக கொண்டுள்ள பாம்பு; நால்வாய்=தொங்கும் வாய், துதிக்கை; கோடு=தந்தம்; காய்ந்த= கோபத்துடன் வந்த; கரி=ஆண் யானை; ஈடு=வல்லமை

பொழிப்புரை:

பிரணவ மந்திரத்தினை உணர்த்தும் ஒரு தண்டினை அடிபாகமாகக் கொண்டு, பிளக்கும் தன்மை கொண்டுள்ள மூன்று இலைகள் போன்று கூர்மையாக உள்ள முனைகளை உடைய சூலத்தினை ஏந்தியவாறு, மூன்று தொழில்களையும் புரிபவன் நான் ஒருவனே என்பதை உணர்த்தும் பெருமானே, நான்கு வேதங்களை நான்கு கால்களாகக் கொண்டுள்ள மான் கன்றினை ஏந்தியவனே; மிகுந்த கோபத்துடன் உன்னை நோக்கி வந்ததும், தொங்குகின்ற துதிக்கையை வாயாகக் கொண்டதும், மூன்று இடங்களில் மதநீர் பொழிவதும், இரண்டு தந்தங்களையும் உடையதாக ஒப்பற்ற வலிமையுடன் வந்த ஆண் யானையின் வலிமையை அழித்து அதன் தோலினை உரித்துப் போர்த்துக் கொண்ட பெருமானே,       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com