123. ஓர் உருவாயினை - பாடல் 19--24

போற்றப்படும் பெருமான்
123. ஓர் உருவாயினை - பாடல் 19--24


    ஒருங்கிய மனத்தோடு
    இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து
    நான்மறை ஓதி ஐ வகை வேள்வி
    அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி
    வரன் முறை பயின்று எழு வான் தனை வளர்க்கும்
    பிரமபுரம் பேணினை

விளக்கம்:

மேற்குறிப்பிட்ட வரிகளில் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையில் இருப்பதை நாம் காணலாம். எழுவான் என்ற சொல்லில் உள்ள எழு என்ற பகுதி ஏழு எனப்படும் எண்ணினை குறிப்பதாக கொள்ளவேண்டும். இந்த வரிகளில் சீர்காழி நகரில் வாழும் அந்தணர்களால் பேணி போற்றப்படும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், சீர்காழி நகரத்து அந்தணர்களின் தன்மைகளை இங்கே குறிப்பிடுகின்றார். இருபிறப்பு என்பது அந்தணர்களின் வாழ்க்கையில் இரண்டு பகுதியை குறிக்கும். முதலாவது உபநயனம் சடங்கு நடைபெறுவதற்கு முன்னர், இரண்டாவது உபநயனம் நடந்தேறிய பின்னர். அந்தணச் சிறுவர்கள் அனைவரும் உபநயனம் சடங்கு நடைபெற்ற பின்னர், ஞானத்தைத் தேடும் வழியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக கருதப் படுகின்றனர். வேதங்களைக் கற்று அறிந்து கொள்ளும் தகுதி அவர்களுக்கு உபநயனம் முடிந்த பின்னர் தான், கிடைக்கின்றது. என்வே தான் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்து உடல் வளரத் தொடங்குவது முதல் பிறப்பாகவும், உபநயனம் முடிந்த பின்னர் ஞானம் வளரத் தொடங்குவது இரண்டாவது பிறப்பாகவும் கருதப்பட்டு, அவர்களை இருபிறப்பாளர்கள் என்று அழைக்கின்றனர். உப=இரண்டு; அயனம்=பிறப்பு; உபநயனம் என்ற சொல்லுக்கே இரண்டாவது பிறப்பு என்று பொருள்,

உபநயனம் முடிந்த பின்னர் அவர்களது வாழ்க்கை நிலையிலும் மாறுதல் ஏற்படுகின்றது. தங்களது மகனை மிகவும் செல்லமாக வளர்த்த பெற்றோர்கள், அந்த மகனுக்கு உபநயனச் சடங்கு செய்வித்த பின்னர், ஒரு நல்ல ஆசானை தேர்ந்தெடுத்து, அந்த ஆசானிடம் தங்களது மகனை ஒப்படைத்து வேதங்கள் கற்றுத் தருமாறு வேண்டுகின்றனர். அந்த குழந்தையும் தனது பெற்றோறரை விட்டுப் பிரிந்து, குருகுலம் சென்று அடைந்து பாடம் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றான். பாடம் கற்றுக் கொள்வதுடன் தனது தேவைகளை தானே கவனித்துக் கொள்ளவும் தொடங்குகின்றான். சங்கரமடம் போன்ற நிறுவங்களின் ஆதரவில் நடைபெறும் வேத பாடசாலைகளில் இன்றும் இந்த நிலை வழக்கில் இருப்பதை நாம் காணலாம். இவ்வாறு மாறுபட்ட இரண்டு வாழ்க்கையை மேற்கொள்ளும் அந்தணர்களை பண்டைய நாளில் இருபிறப்பாளர் என்று அழைத்தனர். குறை=கடமை; முப்பொழுது குறை என்று மூன்று வேளைகளிலும் அந்தணர்கள் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் முதலான கடமைகளை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஐவேள்வி என்ற சொல் பொதுவாக தேவயாகம் முதலான யாகங்களை குறிக்கும் என்றாலும், அந்தணச் சிறுவர்களை குறிப்பிடும் போது அந்த விளக்கம் பொருந்தாது. எனவே ஐவேள்வி என்று இங்கே குறிப்பிடப்படுவது, குருவழிபாடு, சிவவழிபாடு, மாகேச்சர வழிபாடு, மறையவர் வழிபாடு மற்றும் அதிதி வழிபாடு என்பவற்றை குறிக்கும் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. முதல் எழுத்து=பிரணவ மந்திரம்; வரன்முறை=முறையாக; வான்=மழை, வானவர்கள், முக்தி நிலை என்று பல பொருள்கள் கொண்ட சொல். அந்தணர்கள் செய்யும் வேள்வி முதலான செயல்களால் மழை பொழிகின்றது, தேவர்கள் வேள்வி ஆகுதி பெற்று வளர்கின்றனர்; அந்தணர்கள் தாங்கள் வீடுபேறு அடையும் தகுதி பெறுகின்றனர் என்றும் பொருள் கொள்ளலாம். ஓர்ந்து=உணர்ந்து; ஆறங்கம் அமைத்து=தாங்கள் செய்யவேண்டிய ஆறு செயல்களைச் செய்து (வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் அளித்தல், தானம் பெற்றுக் கொள்ளுதல்).

ஒருங்கிய மனம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மனம் எப்போதும் அலைபாயும் தன்மையை உடையது. அதிலும் குறிப்பாக, உடலின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற சிந்தனையை முதலாகக் கொண்டு அதே நினைப்பில் இருப்பது. தனது உடலுக்கு உணவினைத் தேடுவதிலும், விருப்பம் போல் தூங்கிக் கழிப்பதிலும், பிற உயிர்களால் தனக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பயந்தும், போகங்களை அனுபவித்து ஐந்து புலன்களையும் திருப்திப் படுத்துவதிலும் ஆழ்ந்து சிந்தனை செய்கின்றது. அத்தகைய சிந்தனைகள் ஏதுமின்றி, பெருமானின் திருப்பாத கமலங்களில் ஒன்றி வழிபாடு செய்யும் மனம் வேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஒருங்கிய மனம் என்று இங்கே கூறுகின்றார். சம்பந்தர் வாழ்ந்த நாட்களில், சீர்காழியில் வாழ்ந்த அந்தணர்கள் அவ்வாறு இருந்தமை இந்த பாடலில் புலனாகின்றது.    
                  
பொழிப்புரை:

இரு பிறப்பாளர்களாக தாங்கள் இருக்கும் தன்மையினை நன்கு உணர்ந்து அந்த தன்மையின் வழியே ஒழுகி, ஒன்றிய மனத்துடன், மூன்று வேளைகளிலும் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்தும் நான்மறைகளை ஓதியும் ஐந்து வகையான வேள்விகளை வளர்த்தும், வேதம் ஓதுதல் முதலாகிய தாங்கள் செய்யவேண்டிய ஆறு செயல்களைச் செய்தும், வேதங்களின் மூலமாகிய முதல் எழுத்து என்று சொல்லப்படும் பிரணவ மந்திரத்தை ஓதியும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வரைமுறையின் படி வாழ்க்கையை நடத்தியும் உலகில் குறைவின்றி மழை பொழியவும், ஆகுதி பெற்று வானவர்கள் வாழவும் வழிவகுக்கும் அந்தணர்கள் நிறைந்த பிரமபுரத்தை, இறைவனே நீ உனது உறைவிடமாகக் கொண்டு அங்கே விருப்பத்துடன் இருக்கின்றாய்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com