பாடல் 6:
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
பவள மேனியர் என்று மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பச்சை மேனியர் என்று குறிப்பிடுகின்றார். பச்சை என்பது பார்வதி தேவி மற்றும் திருமாலின் மேனி நிறமாக சொல்லப் படுகின்றது. தேவியையும் திருமாலையும் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளமையால் பச்சை நிறத்து மேனியுடன் திகழ்கின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தருமபுர ஆதீனத்து குறிப்பினில், பெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான சத்யோஜாதம் முகத்தின் நிறம் பச்சை என்பதை குறிப்பிடும் விதமாக இந்த குறிப்பு அமைந்துள்ளது என்று உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தேவியையும் திருமாலையும் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ள பெருமான் பச்சை நிறத்து மேனியராக விளங்குகின்றார். இவர் பல இடங்களுக்கும் சென்று பலி ஏற்கின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்ச்சரம் தலத்தில் விருப்பத்துடன் வீற்றிருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.