பாடல் 7:
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார் தமக்கு
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
விளக்கம்:
இந்த பாடலில் பெருமானின் அடையாளங்களில் கோவணமும் ஒன்று என்பது உணர்த்தப் படுகின்றது. கரைதல்=தேய்தல், வருந்துதல், ஊனம்=குற்றம், குறைவு; கரைதல் என்ற சொல்லுக்கு குற்றம் என்றும் ஒரு பொருள் உள்ளது. இந்த பொருளினை உணர்த்துவதாக கொண்டு, பெருமானின் அடையாளங்கள் குற்றம் ஏதுமின்றி குணங்களுடன் திகழ்வதாக அளிக்கப்படும் விளக்கமும் பொருத்தமே.
பொழிப்புரை:
பெருமானின் திருவேடங்களை மனதினில் தியானிக்கும் அடியார்களுக்கு வருத்தம் ஏதும் ஏற்படுவதில்லை. அந்த திருவேடங்களின் பெருமையை எடுத்துரைக்கும் அடியார்களுக்கு வாழ்வினில் குறையேதும் ஏற்படுவதில்லை; அவர்கள் உலகினில் நிலையான புகழுடன் வாழ்வார்கள். இவ்வாறு அடியார்களை சிறப்பாக வாழவைக்கும் தன்மை கொண்ட அடையாளங்களை பெற்றுள்ள இறைவன், அலைகள் பொங்கியெழும் வண்ணம் நீர்ப்பெருக்கினை உடைய திருந்துக்தேவன்குடி தலத்தில் வீற்றிருக்கின்றான். அவன் தனது இடுப்பினில் வெண்மை நிறம் கொண்ட கோவணத்தை அணிந்துள்ளான்.