138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 7

சிற்றின்பங்களில் ஆழ்ந்து
138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 7

பாடல் 7:

    ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்
    மாண் அழிந்த மூப்பினால் வருந்தன் முன்னம் வம்மினோ
    பூணல் வெள் எலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்
    கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே
   

விளக்கம்:

ஏண்=பெருமை; மாண்=மாண்பு, வலிமை; மீண்டும் மீண்டும் புவனியில் பிறப்பதற்கு வழி வகுப்பதால் பெருமையற்ற வாழ்க்கை என்று கூறப்படுகின்றது. வாழ்க்கையின் பெருமையற்ற நிலையினை உணராமல், வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து மறந்துவிடுகின்றோம்.. ஆனால் வயது முதிர்ந்த காலத்தில் சிற்றின்பங்களில் நாட்டம் குறையவே, நாம் கடந்த காலத்தில், இறைவனை நினையாமல் வீணாக கழித்த நாட்களை எண்ணி வருந்துகின்றோம்.     

பொழிப்புரை:

மீண்டும் மீண்டும் நம்மை பிறவியில் ஆழ்த்துவதால் பெருமையற்ற வாழ்க்கை என்பதை உணராமல் பல விதமான சிற்றின்பங்களில் ஆழ்ந்து கிடப்பதே இன்பம் என்று நினைத்து இறைவனை நினையாமல் வாழ்ந்த நீர், வலிமை குன்றிய காலத்தில் வருந்துவதால் இலாபம் ஏதுமில்லை. அவ்வாறு வருந்துவந்தன் முன்னம் நீர், வெண்மை நிறத்தில் உள்ள எலும்புகளை மாலையாக பூண்டவனும், பொன் போன்ற சடையின் மீது வளைந்த வெண்மை நிறத்து பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி, பயன் அடைவீர்களாக.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com