பாடல் 4:
அடைவாகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடமாம்
கடையார் தரு அகிலார் கழை முத்தம் நிரை சிந்தி
மிடையார் பொழில் புடைசூழ் தரு விரிநீர் வியலூரே
விளக்கம்:
கழை=மூங்கில்; நன்கு முற்றிய மூங்கில், பாம்பின் கழுத்து, யானையின் மத்தகம் ஆகிய இடங்கள் முத்துகள் தோன்றும் இடம் என்று கூறுவார்கள்; அடைவு=முறை என்று சிலரால் பொருள் கூறப்பட்டாலும் சரணடைதல் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கடையார்= உழவர்கள்; கடையார் என்ற சொல்லுக்கு அழகிய கடைகள் என்று பொருள் கொண்டு, இந்த தலத்து கடைகளில் அகில் கட்டைகள் மற்றும் முத்துகள் விற்கப்பட்டன என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.
பொழிப்புரை:
பிரம கபாலத்தில் தாருகவனத்து மகளிர் இட்ட பலியை விரும்பி ஏற்றுக்கொண்ட பெருமான், தனது அடியார்கள் சரணம் என்று திருவடிகளைப் பணிந்து தொழ உறைகின்ற இடம் வியலூர் தலம் ஆகும். காவிரி நதி அடித்துக் கொண்டு வரும் அகில் கட்டைகள் சேரும் வயல்களில் உழவர்கள் வரிசையாக நட்ட மூங்கில் மரங்கள் வெடித்து அதிலிருந்த முத்துகள் வரிசையாக சிந்தி நெருங்கிய மரங்களின் இடையே காட்சி அளிக்கும் சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து காணப்படும் தலம் வியலூர் ஆகும்.