பாடல் 8:
பொருவார் எனக்கு எதிர் ஆர் எனப் பொருப்பை எடுத்தான் தன்
கருமால் வரை கரம் தோள் உரம் கதிர் நீண்முடி நெரிந்து
சிரம் ஆயின கதறச் செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
பொருவார்=எதிராக சண்டையிடுவார்; பொருப்பு=மலை, கயிலை மலை; அரக்கன் இராவணனின் வலிமையுடன் தன்னை வெல்பவர் எவரும் இல்லை என்ற அவனது செருக்கும் அடக்கப்பட்டது என்று நயமாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை:
தனக்கு எதிராக சண்டை போடுவார் எவரும் இல்லை என்ற செருக்குடன் கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் கரியமலை போன்ற வலிமையான தோள்கள், கைகள், ஒளிவீசும் நீண்ட கிரீடங்கள் ஆகியவை நொறுங்கும் வண்ணமும், அவனது பத்து தலைகளும் மலையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வருந்தி கதறும் வண்ணமும், வீரக்கழல் அணிந்த தனது கால் பெருவிரலால் கயிலை மலையை அழுத்திய பெருமான் உறையும் இடம் நீர்வளம் நிறைந்த வியலூர் தலமாகும்.