லண்டன், மே 2: உலகக் கோப்பை "டி-20' கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பால் காலிங்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அணியை வழிநடத்திவந்த ஆண்ட்ரூ ஸ்டிராஸ், உலகக் கோப்பைக்கான அணித் தேர்விலிருந்து விலகிக்கொண்டதையடுத்து, காலிங்வுட்டைத் தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
ஓர் ஆண்டுக்கு முன்பு ஒருதின அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து காலிங்வுட் விலகியது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை டி-20 போட்டி இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்பதால் வலுவான அணியைக் களமிறக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதற்காக 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காயம் காரணமாக சென்னை கிங்ஸ் அணியிலிருந்து திடீரென நாடு திரும்பிய ஆண்ட்ரூ பிளிண்டாப்பும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
கேப்டன் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள காலிங்வுட், டெல்லி டெவில்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
அணி விவரம்: காலிங்வுட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ரவி போபரா, ஸ்டூவர்ட் பிராட், ஆண்ட்ரூ பிளிண்டாப், ஜேம்ஸ் போஸ்டர், ராபர்ட் கீ, மஸ்கரென்ஹாஸ், மோர்கன், கிரஹாம் நேப்பியர், கெவின் பீட்டர்சன், ஒவைஸ் ஷா, ரியான் சைடுபாட்டம், கிரேம் ஸ்வான், லூக் ரைட்.