சென்னை, மே 2: கல்லூரிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று தமிழக உயர் கல்வித் துறை செயலர் கணேசன் வலியுறுத்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 6-வது ஆண்டு விளையாட்டு விருதளிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நமது ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் வகித்து வந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தை இழந்துவிட்டதுடன், தகுதிச் சுற்றுக்கும் போராட வேண்டியுள்ளது.
விளையாட்டு என்பது தேசத்தின் பெருமையை பறைசாற்றுவதாகும். ஒரு காலத்தில் விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவை விட பன்மடங்கு பின்னடைவு பெற்றிருந்த சீனா, தற்போது உலகம் போற்றக்கூடிய அளவுக்கு விளையாட்டிலும் முன்னேறியிருக்கிறது.
சங்க இலக்கியத்தில் வல்வில் ஓரி, அம்பை எய்து யானை, மான், புலி, பன்றியைக் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாம் இன்று விளையாட்டில் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. விளையாட்டை மேம்படுத்த இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கல்வி நிறுவனங்கள் விளையாட்டை மேம்படுத்தும் உந்துசக்தியாக இருக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் விளையாட்டு மற்றும் உடற்கல்வியை கட்டாயமாக்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கணேசன்.