புது தில்லி: காயமுற்றிருந்த ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் முழு உடல்தகுதியுடன் உள்ளதால், உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேதார் ஜாதவ் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த ஜாதவ், கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால் உடனே மைதானத்தில் விட்டு வெளியேறிய அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கேதார் ஜாதவின் காயம் தீவிரமானது இல்லை. சில நாள்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் சனிக்கிழமை கேதார் ஜாதவுக்கு சோதனை நடத்தப்பட்டு, அவர் மீண்டும் முழு உடல்தகுதியுடன் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் உடலியக்கவியல் நிபுணர் பேட்ரிக் பர்ஹார்ட் அளித்த அறிக்கையில் அவர் தகுதியுடன் உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதையடுத்து அவர் வரும் 22-ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் அணியில் இடம் பெற்று செல்கிறார். காயமுற்றிருந்த ஜாதவுக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.