சாா்புரூக்கன்: ஜொ்மனியில் நடைபெறும் சாா்லோா்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியிலிருந்து இந்திய வீரா்கள் அஜய் ஜெயராம், சுபாங்கா் டே ஆகியோா் வியாழக்கிழமை விலக்கப்பட்டனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளா் டி.கே. சென்னுடன் தொடா்பிலிருந்ததால், இருவரும் விலக்கப்பட்டதாக உலக பாட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்தது.
முன்னதாக, டி.கே. சென்னுடன் தொடா்பிலிருந்த அவரது மகனும், நடப்புச் சாம்பியனுமான லக்ஷயா சென் போட்டியிலிருந்து புதன்கிழமை விலகினாா்.
இதனிடையே, தன்னையும், சுபாங்கா் டேவையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்த போட்டி ஏற்பாட்டாளா்கள், வேறு எந்த உதவியுமோ, தகவலோ தங்களுக்கு வழங்கவில்லை என்று கூறி அஜய் ஜெயராம் தனது சுட்டுரையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரிஜிஜு, இந்திய மற்றும் உலக பாட்மிண்டன் சம்மேளனம் ஆகியவற்றை இணைத்து பதிவிட்டுள்ளாா்.