புது தில்லி: பாட்மிண்டன் விளையாட்டில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய பலமான அணியை அந்தப் போட்டிகளுக்காக இந்திய பாட்மிண்டன் சங்கம் திங்கள்கிழமை அறிவித்தது.
இதில் சிந்து, ஸ்ரீகாந்துடன் சாய்னா நெவால், சாய் பிரணீத், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிரக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஆகியோர் அகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டில் முதலாவதாக ஜனவரி 12 முதல் 17 வரை யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன், அதன் பிறகு ஜனவரி 19 முதல் 24 வரை டோயோடா தாய்லாந்து ஓபன், ஜனவரி 27 முதல் 31 வரை ஹெச்எஸ்பிசி உலக டூர் ஃபைனல்ஸ் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் அந்த 8 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த அணியில் வீரர், வீராங்கனைகளுடன் ஒற்றையர் பிரிவு பயிற்சியாளர்கள் அகஸ் டுவி சன்டோசோ, பார்க் டே சாங், இரட்டையர் பயிற்சியாளர் டுவி கிறிஸ்டியாவன், உதவி ஊழியர்கள் கிரன் சல்லகுண்ட்லா, ஜான்சன், இவாஞ்சலினா, எம்.ஸ்ரீகாந்த் ஆகியோரும் சேர்கின்றனர்.
கரோனா சூழல் காரணமாக நடப்பாண்டில் பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்டதால் ஓய்விலிருந்த சிந்து, சாய்னா உள்ளிட்ட முக்கிய வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். ஸ்ரீகாந்த் மட்டும் கடந்த அக்டோபரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்றார்.