பரபரப்பாக நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி அடைந்துள்ளது. பரபரப்பான போட்டியில், 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை பிரிட்டனிடம் தவறவிட்டுள்ளது.
முன்னதாக, 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி, சிறப்பாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், கடைசி 20 நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து பிரிட்டன் வெற்றிபெற்றது. இப்போட்டியில், தோல்வி அடைந்திருந்தாலும், இந்திய அணி வீரர்கள் தொடர் முழுவதும் ஆக்ரோஷமாக விளையாடி எதிர் அணிகளுக்கு கடும் போட்டி அளித்தது.
இதையடுத்து, வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பதக்கத்தை விட பெரிதான ஒன்றை வென்றிருக்கிறோம் என பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஸ்ஜேர்ட் மரிஜ்னே நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் பதக்கத்தை வெல்லவில்லை. அதை விட பெரிதான ஒன்றை வென்றிருக்கிறோம். இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளோம். கடின உழைப்பை மேற்கொண்டால் கனவு நிறைவேறும் என லட்சக்கணக்கான சிறுமிகளை உத்வேகப் படுத்தியுள்ளோம். அதில், நம்பிக்கை வையுங்கள். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.
We did not win a medal, but I think we have won something bigger. We have made Indians proud again and we inspired millions of girls that dreams CAN come true as long as you work hard for it and believe it! Thanks for all the support!