20 ஆண்டு காலமாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அந்த அணிக்காக இனி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் ஒரு சிலவற்றை பிரிக்கவே முடியாது. இந்திய அணிக்கு சச்சின், டென்னிஸூக்கு ரோஜர் பெடரர், ஜமைக்காவுக்கு போல்ட், அமெரிக்காவுக்கு பெல்ப்ஸ் என இப்பட்டியில் நீண்டு கொண்டே செல்லும்.
அதுபோல்தான், பார்சிலோனா அணிக்கு அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி திகழ்ந்து வந்தார்.
தற்போது, அது முடிவுக்கு வந்துள்ளது. 20 ஆண்டு காலமாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அந்த அணிக்காக இனி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பார்சிலோனா அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பார்சிலோனா அணி வெளியிட்ட அறிக்கையில், "அணி நிர்வாகத்திற்கும் மெஸ்ஸிக்கும் இடையே ஒப்புந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டிருந்தபோதிலும், நிதி சிக்கல் காரணமாகவும் அணி கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்னை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாகவும் அதை தொடர முடியாது.
இச்சூழல் காரணமாக, பார்சிலோனா அணியில் மெஸ்ஸி தொடர மாட்டார். அணி நிர்வாகம், மெஸ்ஸியின் விருப்பங்கள் நிறைவேறாததால் இரு தரப்பும் வருத்தம் தெரிவித்து கொள்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.