ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு எதிராக ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசியதற்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய (ஞாயிற்றுக் கிழமை) நாள் ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீசியபோது பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜ் மற்றும் பும்ராவை மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் விதத்தில் விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக அணியின் கேப்டன் ரஹானே மூலம் நடுவர்களிடம் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் புகாரளித்தனர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு ரசிகர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ரசிகர்களின் இத்தகைய செயலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள விராட் கோலி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுண்டரி எல்லையில் இதுபோன்ற பலவித தாக்குதல்கள் நடக்கின்றன. இது ரெளடித்தனத்தின் உச்சம். களத்தில் இதுபோன்று நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.