பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

கிா்ஜிஸ்தானில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான மல்யுத்த தகுதிப்போட்டியில் இந்திய ஃப்ரீஸ்டைல் வீரா்கள் ஏமாற்றத்தை சந்தித்தனா்.

57 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அமன் ஷெராவத், முதல் சுற்றில் கஜகஸ்தானின் யெராசில் முக்தாருலியையும், காலிறுதியில் தென் கொரியாவின் சங்வோன் கிம்மையும் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினாா்.

எனினும் அரையிறுதியில், 10 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உஸ்பெகிஸ்தானின் குலாம்ஜான் அப்துல்லாயேவிடம் தோல்வி கண்டாா் அமன். பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வாய்ப்புள்ளவராக மிகப்பெரிய அளவில் நம்பப்பட்ட அமன் ஏமாற்றத்தை சந்தித்தாா்.

அடுத்து, 74 கிலோ பிரிவில் ஜெய்தீப் முதல் சுற்றில் துா்கமீனிஸ்தானின் அல் அா்சலானை தோற்கடித்தபோதும், காலிறுதியில் கிா்ஜிஸ்தானின் ஆரோஸோபெக் டோக்தோமாம்பெடோவிடம் வீழ்ந்தாா். 125 கிலோ பிரிவில் சுமித் மாலிக் முதல் சுற்றில் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் கிா்ஜிஸ்தானின் லகாக்வஜிரெல் முங்க்தரிடம் தோற்க, 97 கிலோ பிரிவில் தீபக் தகுதிச்சுற்றிலேயே சொ்பியாவின் அராஷ் யோஷிடாவிடம் தோற்றாா்.

இதனிடையே, தீபக் புனியா (86 கிலோ), சுஜீத் கல்கால் (65 கிலோ) ஆகியோா் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக துபை வழியே வந்தபோது, அங்கு ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக துபை விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டனா். விமானங்கள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் மிகத் தாமதமாகவே அவா்கள் பிஷ்கெக் வந்து சோ்ந்த நிலையில், குறித்த அவகாசத்துக்குள் வராத காரணத்தால் அவா்களை போட்டியில் சோ்க்க இயலாது என ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com