ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பதக்கப் பட்டியலைத் துவக்கியது.
18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் போட்டிகள் நடக்கின்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர் வீராங்கனைகள், அதிகாரிகள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா மற்றும் ரவி குமார் ஜோடி 429.9 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா கணக்கை தொடங்கியது.
இந்தப்போட்டியில் சீன தைபே-வைச் சேர்ந்த யின்ஷின் லின், சௌச்சௌன் லூ தங்கமும், சீனாவின் சாௌ ரௌஸோ, யாங் ஹோரன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.