தோனி சர்ச்சை: ‘நோ பால்’ முடிவை நடுவர் திரும்பப் பெறலாமா? ஐசிசி விதிமுறை என்ன சொல்கிறது?

நடுவர் ஒருமுறை தீர்ப்பு அளித்ததை மாற்றமுடியுமா, அதற்கு ஐசிசி விதிமுறைகள் அனுமதிக்கிறதா...
தோனி சர்ச்சை: ‘நோ பால்’ முடிவை நடுவர் திரும்பப் பெறலாமா? ஐசிசி விதிமுறை என்ன சொல்கிறது?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை. முதலில் ஆடிய ராஜஸ்தான் 151/7 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 155/6 ரன்களை எடுத்து வென்றது. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஆல்ரவுண்டர் சாண்ட்னர். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. பாதி ஆட்டங்களை விளையாடியுள்ள நிலையில் ஏழு ஆட்டங்களில் ஆறில் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளதால் சென்னை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் 4 புள்ளிகள் எடுத்தால் போதும். இதனால் சென்னை அணி பிளேஆஃப்-புக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் பந்துவீசிய போது நோபால் வீசியதாக சர்ச்சை எழுந்தது. கடைசி ஓவரின் நான்காவது பந்தை கள நடுவர் நோ பால் என சைகையால் தெரிவித்தார். ஆனால் ஸ்கொயர் லெக் நடுவர் நோ பால் அல்ல என மறுத்தார். இதனால் நோ பால் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனினும் இதைக் கண்டு ஆவேசமான சென்னை கேப்டன் தோனி மைதானத்தின் உள்ளே சென்று நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். நோ பால் என அறிவித்தபிறகும் அதைத் திரும்பப் பெற்றது ஏன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நடுவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாதால் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இக்காட்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எந்தச் சூழலிலும் நிதானமாக இருக்கும் தோனி, இதுபோல தன்னிஷ்டத்துக்கு ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததை கிரிக்கெட் நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக தோனிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கள நடுவர் ஒருமுறை தீர்ப்பு அளித்ததை மாற்றமுடியுமா, அதற்கு ஐசிசி விதிமுறைகள் அனுமதிக்கிறதா என்கிற கேள்விகள் உருவாகியுள்ளன. 

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கள நடுவர்கள் ஐசிசி விதிமுறைகளின்படியே நடந்துகொண்டிருக்கிறார்கள். 

ஐசிசிக்கு கிரிக்கெட் விதிமுறைகளை வகுத்துக் கொடுக்கும் எம்சிசி அமைப்பு - நடுவரின் முடிவு குறித்த 12.1 விதிமுறையில் இவ்வாறு கூறியுள்ளது:

‘எந்தவொரு நடுவரும் எந்த முடிவையும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அது உடனடியாக நிகழவேண்டும். இதைத் தவிர, நடுவரின் முடிவே இறுதியானது.’

எனவே இதன் அடிப்படையில் முதலில் நோ பால் என அறிவித்த கள நடுவர் பிறகு ஸ்கொயர் லெக் நடுவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com