ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் நல்ல உடல்நலத்துடனும் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளில் பங்கேற்கவும் என இரு முக்கியக் காரணங்களுக்காக ஐபிஎல்-லில் தற்போது விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்களில் சிலர் சொந்த நாட்டுக்கு விரைவில் பறக்கவுள்ளார்கள். இதனால் அவர்கள் ஐபிஎல் போட்டியில் முழுதாகக் கலந்துகொள்ளாத நிலைமை ஏற்படவுள்ளது. அவர்களைப் பற்றிப் பார்க்கலாம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களும் எவருமே போட்டி முடியும்வரை விலகப் போவதில்லை. இம்ரான் தாஹிர், டு பிளெஸிஸ் போன்ற பிரபல வெளிநாட்டு வீரர்கள் முழு ஐபிஎல் போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
தில்லி கேபிடல்ஸ்
இந்த அணிக்கும் சென்னை அணி போல எந்தப் பிரச்னையும் ஏற்படப் போவதில்லை.
மும்பை இந்தியன்ஸ்
ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் ஃபெஹ்ரென்டார்ஃப் மே 1-க்குப் பிறகு விலகிவிடுவார். அவர் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் மலிங்கா, பும்ரா என இரு முக்கியப் பந்துவீச்சாளர்கள் உள்ளதால் இதனால் மும்பை அணிக்குப் பெரிய கவலை இருக்காது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
யாரும் விலகமாட்டார்கள். முக்கியமாக ரஸ்ஸல் கடைசிவரை விளையாடுவார் என்பது கொல்கத்தாவுக்குச் சாதகமான செய்தி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இந்த அணிக்கும் பிரச்னைகள் கிடையாது. அனைவருமே கடைசிவரை உடன் இருப்பார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஷகிப் அல் ஹசன் மே மாத ஆரம்பத்தில் கிளம்பிவிடுவார். இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் ஏப்ரல் 25 அன்றும் டேவிட் வார்னர் மே 1 அன்றும் கிளம்பிவிடுவார்கள். இவ்விருவரும் கிளம்பிவிட்டால் சன்ரைசர்ஸ் என்ன செய்யும் என்று தெரியவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ்
பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் (தேர்வு செய்யப்பட்டால்) ஆகிய வீரர்கள் ஏப்ரல் 25 வரைதான் ஐபிஎல்-லில் விளையாடுவார்கள். ஸ்மித் மே 1 அன்று கிளம்பிவிடுவார். இதனால் ஏற்கெனவே 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, முக்கியமான வீரர்கள் வெளியேறுவதால் மேலும் பின்னடைவைச் சந்திக்கவுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மொயீன் அலி (தேர்வு செய்யப்பட்டால்) ஏப்ரல் 25 வரை மட்டுமே விளையாடுவார். ஸ்டாய்னிஸ் மே 1 அன்று கிளம்பிவிடுவார்.