தில்லி கேபிடல்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் ககிசோ ரபடா.
12 ஆட்டங்களில் அவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் முதுகு வலிப் பிரச்னை காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார் ரபடா. காயம் காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக நாடு திரும்புமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ரபடாவுக்குக் கட்டளையிட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் பிளேஆஃப் ஆட்டங்களிலும் ரபடாவால் பங்கேற்கமுடியாது.
இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டியை விட்டு விலகுவது கஷ்டமாக உள்ளது. ஆனால் உலகக் கோப்பை தொடங்க ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை அவசியமாகிறது. எங்களுடைய தில்லி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் என்று இந்த விவகாரம் குறித்து தன் நிலையை வெளிப்படுத்தியுள்ளார் ரபடா.