டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாத நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து, ரஹானே கொடுத்த கேட்ச்சை இஷாந்த் சர்மா தவறவிட்டார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
அதன்பிறகு, ரஹானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் டெல்லி பந்துவீச்சாளர்களை மிரட்டினர். குறிப்பாக ரஹானே ஆடிய விதம் மிரட்டலாக இருந்தது. பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 52 எடுத்த ராஜஸ்தான் அணி, 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதனிடையே, ரஹானே தனது 32-ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார். அவர் தனது 32-ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயயே அவர் ஆட்டமிழந்தார். 2-ஆவது விக்கெட்டுக்கு ரஹானே - ஸ்மித் ஜோடி 130 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் இந்த போட்டியிலும் சொதப்ப 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டர்னர் இந்த போட்டியிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். எனினும், தொடக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2-ஆவது சதத்தை அடித்தார்.
இதையடுத்து, பின்னி கடைசி கட்டத்தில் ஒரளவு அதிரடி காட்டினார். ஆனால், அவரும் கடைசி ஓவரில் ரபாடா பந்தில் போல்டானார். அவர் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹானே 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.