ராஜஸ்தான் ராயல்ஸுடனான போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ரஹானே முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். ராகுல் 4 ரன்களுக்கு குல்கர்னி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, கெயில் மற்றும் மயங்க் அகர்வால் இணை நல்ல கூட்டணியை அமைத்தது. ஆனால், இவர்களால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. ஓவருக்கு 7 ரன்களை கடந்து ரன் குவிக்க திணறினர்.
இந்நிலையில், அதிரடிக்கு மாற முயன்ற அகர்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, கெயிலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார்.
இதையடுத்து, முதல் 29 பந்துகளில் 34 ரன்கள் குவித்து விளையாடி வந்த கெயில் அதிரடிக்கு மாறினார். உனத்கட் வீசிய 12-ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் பவுண்டரி, 4-ஆவது பந்தில் சிக்ஸர் என ராஜஸ்தானை மிரட்ட தொடங்கினார். இதன்மூலம், அவர் தனது அரைசதத்தையும் அடித்தார்.
இதையடுத்து, கெயில் அதிரடியில் மிரட்ட சர்பிராஸ் கானும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து துரிதமாக ரன் சேர்த்தார். இதனால், அந்த அணியின் ரன் ரேட் 9-ஐ தொட்டது.
தொடர்ந்து, ஸ்டோக்ஸ் வீசிய 16-ஆவது ஓவரின் முதல் 4 பந்தில் கெயில் 1 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து பஞ்சாப் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். ஆனால், அதே ஓவரின் 5-ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று நூலிழையில் கேட்ச் ஆனார். அவர் 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.
அதன்பிறகு களமிறங்கிய நிகோலஸ் பூரன் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காமல் 14 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், சர்பிராஸ் கான் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை அதிரடியுடன் நிறைவு செய்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததன் மூலம் அவர் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், குல்கர்னி மற்றும் கௌதம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.