மும்பைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் அதிரடி தொடக்கத்தை தந்தார். ஆனால், கில் திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால், 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஹார்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியில் மிரட்டி வந்த லின் பாண்டியாவின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆனால், உத்தப்பா மறுமுனையில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக மெக்லனன் வீசிய 11-வது ஓவரில் உத்தப்பாவால் ஒரு பந்தை கூட பேட்டால் தொட முடியவில்லை. அதனால் அந்த ஓவர் மைடன் ஓவரானது. இதனால் கொல்கத்தா அணி மிகப் பெரிய நெருக்கடிக்குள்ளானது.
இந்த நெருக்கடியின் காரணமாக கார்த்திக் அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால், அவர் மலிங்கா ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரஸலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், கொல்கத்தா அணி 13 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு, உத்தப்பா அவ்வப்போகு சிக்ஸர்கள் அடித்தாலும் நிறைய பந்துகளில் ரன் குவிக்க முடியாமல் திணறினார். அதனால், சிக்ஸர் அடித்தும் அது பயனளிக்கவில்லை.
அடுத்து களமிறங்கிய ராணா அதிரடியாக விளையாடினார். 3 சிக்ஸர் அடித்து விளையாடி வந்த ராணா மலிங்கா வீசிய 18-வது ஓவரில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்தும், கொல்கத்தா அணி பெரிதளவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்து திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உத்தப்பா கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதில் 24 பந்துகளில் அவர் ரன் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.