காஞ்சிபுரம், ஆக. 4: தமிழகம் முழுவதும் சுமார் 250 தலைமைக் காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு கிடைக்குமா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் பணிபுரியும் காவலர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறையை மேம்படுத்த அவ்வப்போது அமைக்கப்படும் போலீஸ் கமிஷன் பரிந்துரைகளையும் ஏற்று, அரசு செயல்படுகிறது.
ஏராளமான தலைமைக் காவலர்கள் எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு பெற வழியில்லாத சூழலில், சிறப்பு எஸ்.ஐ.க்கள் என்ற புதிய பணியிடத்தை முதல்வர் கருணாநிதி உருவாக்கி உத்தரவிட்டார். இதனால் ஏராளமானோர் பயன் அடைந்தனர். கடந்த 1975-ம் ஆண்டு பணியில் சேர்ந்த தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டது.
அவர்களுக்கு அடுத்து 1976-77-ல் பணியில் சேர்ந்த மொத்தம் 250 காவலர்களுக்கு இதுவரை பதவி உயர்வு தரப்படவில்லை. அனைவரும் 10 ஆண்டுகள் தலைமைக் காவலர்களாக பணி செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு 24 பேர் பணி செய்து வருகின்றனர். கடந்த 22.7.99-ல் தான் மேற்கண்ட 250 பேருக்கும் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு தரப்பட்டது. அரசின் விதிமுறையின்படி 27.6.99-ல் பதவி உயர்வு தந்திருக்க வேண்டும்.
ஆனால் தாமதமாக பதவி உயர்வு கிடைத்ததால் சிறப்பு எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை.
இவர்களில் பெரும்பாலோர் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டனர். சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளதால், முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும், 250 பேருக்கும் சிறப்பு எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட வேண்டும் என ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.