திருவாரூர், ஜூலை 9: திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் இந்த விழா மார்ச் மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்குத் தொடங்கியது.
தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தலைமையில், பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கிவைத்தார்.
பிரம்மாண்டமான ஆழித் தேர்
அலங்கரிக்கப்பட்ட ஆழித் தேரின் உயரம் 96 அடி. எடை 300 டன். திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் சார்பில், இத்தேருக்கு இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொறியாளர்கள் தேரின் வேகம், திசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினர். முன்புறம் 4 வடங்களை பக்தர்கள் இழுக்க, பின்புறம் இரு சக்கரங்களையும் இரு புல்டோசர்கள் தள்ள ஆழித் தேர் வீதிகளில் ஆடி அசைந்து வந்தது பெரிய மலையே வீதியில் உருண்டு வருவது போல காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இதேபோல, ஒவ்வொரு திருப்பத்திலும் தேரை நிறுத்தி, உரிய அளவீடுகள் செய்து, பெரிய இரும்புத் தகடுகளைப் பயன்படுத்தி தேரைத் திருப்பினர். தேர் நிலையாக அதே இடத்தில் நின்று அசைந்தாடித் திரும்புவதைக் காண கண் கோடி வேண்டும் எனக் கூறி பக்தர்கள் பரவசமடைந்தனர்.