வத்தலகுண்டு, செப். 11: தமிழில் இரண்டாவது நாவல் எழுதிய வத்தலகுண்டு ராஜம் அய்யரின் பாழடைந்த வீடு நினைவுச் சின்னமாக மாற்றப்பட வேண்டும் என அவ்வூர் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழில் "பிரதாப முதலியார்' என்ற முதல் சரித்திர நாவலை வேதநாயகம் பிள்ளை எழுதினார். அதைத் தொடர்ந்து "கமலாம்பாள்' என்ற சரித்திர நாவலை வத்தலகுண்டு ராஜம் அய்யர் எழுதினார். வத்தலகுண்டை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் இலக்கிய உலகில் தனியிடம் பிடித்தது.
தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த அதே அக்ரஹாரத்தில்தான் ராஜம் அய்யர் பிறந்தார். இவரது வீடு அதே அக்ரஹாரத்தில்தான் உள்ளது. அந்த வீடு தற்போது பாழடைந்து பூட்டிய நிலையில் உள்ளது. அதைக் கண்டு அவ்வழியே செல்லும் இலக்கிய ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.
தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பேசப்பட்ட "கமலாம்பாள்' சரித்திர நாவல் எத்தனையோ நூலகங்களில் இடம்பெற்றுள்ளன.
அனைவரின் மனதிலும் இடம்பெற்ற நாவல் ஆசிரியர் ராஜம் அய்யர் மறைந்தாலும், இலக்கிய ஆர்வலர்களின் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவரது வீடு மட்டும் ஏன் பாழடைந்துள்ளது?. அவரது வாரிசுகள் எங்கே என்பது தெரியவில்லை.
காலமெல்லாம் போற்றக்கூடிய கண்ணியமான எழுத்தாளர் ராஜம் அய்யர் வளர்ந்த வீடு பாழடைந்து காணப்படுவது எந்த வகையில் நியாயம்? இலக்கியப் பற்று மிகுந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் இதற்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்று இலக்கியவாதிகள், தமிழ்ப்பற்று உள்ளவர்கள், வத்தலகுண்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.