![ஓட்டை உடைசல் வாகனங்கள்... தள்ளாடும் தீயணைப்பு நிலையம்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2012%2F9%2F20%2F17%2Foriginal%2F13firelorry.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
உளுந்தூர்பேட்டை, செப். 13: அவசர காலத்தில் பயன்படும் வகையில் போதிய வாகன வசதிகள் இல்லாமல் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி உட்பட 34 பேர் பணிபுரிந்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை நகரம் சென்னை- திருச்சி- சேலம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதியாக கணக்கிடப்பட்டதால் மக்களின் நலன் கருதி தமிழக அரசு தீயணைப்பு நிலையத்துக்கு இங்கு கொண்டுவந்தது.
இந்த நிலையத்திற்கு ஆரம்ப காலத்தில் தீயணைப்பு வாகனம், தீயணைப்பு அவசர கால மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. வாகனங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து ஒதுக்கப்பட்டன.
அதில் தீயணைப்பு வாகனம் மட்டும் தமிழக முதல்வரால் சென்னையில் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. அந்த வாகனமும் முறையான பராமரிப்பின்றி தானியங்கி மோட்டார் பழுதடைந்துபோனதால் தள்ளிவிட்டுத்தான் இயக்கப்படும் நிலையில் உள்ளது.
மேலும் விபத்து மற்றும் தீயணைப்புக்காக செல்லும் காலங்களில் தானியங்கி மோட்டாரில் சார்ஜ் நிற்காததால் அபாயமணியும் அடிப்பதில்லை என்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த அவசரகால மீட்பு ஊர்தியும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்பதற்கு தாமதம் ஏற்படுகிறது என்ற புகாரும் எழுந்துள்ளது.
தனியார் மீட்பு வாகனங்களை நாடும் போது பணம் கூடுதலாக விரயமாவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் மீட்டு உயிர்கள் காப்பாற்ற முடிவதில்லை என்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.
அதுபோல் இந்நிலையத்தில் நோயாளிகளுக்கான ஊர்தி பல ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. ஒதுக்கியதால் தீ மற்றும் விபத்தில் சிக்கியவர்களை சென்று அழைத்து வரமுடியாமல் பயனற்று கிடக்கிறது.
இப்போது 108 வாகனத்தை அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் அதன் பணி கிராமங்களிலிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பதோடு சரி. ஆனால் தீயணைப்பு ஆம்புலன்ஸில் பாதி கட்டணத்தில் நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குகூட (விழுப்புரம், புதுச்சேரி, சென்னை) உயர் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியும்.
தனியார் ஆம்புலன்ûஸ நாடினால், கூடுதலாக பணம் கேட்பதுடன், நோயாளி கூறும் மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் அவர்களுக்கு கமிஷன் தரும் வேறு சில மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றனர் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பகுதி விபத்துகள் நடக்கும் பகுதியாக உள்ளதால் தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய நீண்ட தூரம் செல்லும் வகையில் ஆம்புலன்ஸýம், விபத்தில் சிக்கியவர்களையும், வாகனங்களையும் மீட்க அவசர கால மீட்பு ஊர்தியும், பராமரிப்பின்றி செயல்படும் தீயணைப்பு வாகனத்தை பழுது நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.